இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவரும் ஆபத்தான கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் புதிய திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த நபரிடம் காணப்பட்ட வைரஸ் இங்கிலாந்தில் பரவிவரும் புதிய திரிபு கொரோனா வைரஸை ஒத்தது என ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் கோவிட் -19 குறித்த பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள இங்கிலாந்தில் பரவிவருவதை ஒத்த புதிய திரிபு வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது. நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை் விட இது வித்தியாசமானது என தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர கூறினார்.
வைரஸின் புதிய திரிபு இலங்கையில் இனங்கணப்பட்டுள்ள நிலையில் இதுவரை புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் சமூகத்தில் புதிய திரிபு வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை